ராவண வதம்
Google Buzz Logo

இந்த ராவண வதம் என்ற ஒரு நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து ராவணனின் எதிரிகள் அதைக் கொண்டாட விழா எடுப்பது என்பதை நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ராவணனின் உருவப் பொம்மையை பத்து தலைகளுடன் உருவாக்கி எதிரே ராமன் போல ஒருவன் வேடமிட்டு வந்து ஊரெல்லாம் சுற்றிவிட்டு பின் ஒரு திடலில் வைத்து அம்பு வீசி ஒவ்வொரு தலையாக பத்து தலைகளையும் கொய்து சாய்ப்பதாக ராவணன் வதம் முடிவுறும். சில ஊர்களில் இப்படி அம்பு வீசி கொய்யப் பொறுமை இல்லாமல் எரியூட்டி ராவண உருவத்தை சாம்பலாக்கி ராவணன் வதம் முடிவுறும்.


இது போல ஒவ்வொரு முறையும் ராமன் வேசம் போடும் நபர் மட்டுமே வேறாக இருக்கும். அவ்வப்போது கிடைக்கும் வண்ணம், வெளிச்சம், மற்றும் இன்ன பிற மூலப் பொருள்களுக்கு ஏற்ப ராவணன் உருவ பொம்மை மற்றும் வதம் செய்யும் முறை மட்டுமே மாறும். மற்றதெல்லாம் மாறாது.

இப்படிப் பட்ட ராவணன் வதம் இப்போது எங்கள் பக்கத்து ஊரில் நடந்து முடிந்ததாக செய்தி சொன்னார்கள். அதிலும் இந்த முறை விபீசனன் வேசமெல்லாம் கூட ஒருவன் போட்டதாகவும், செத்தது ராவணன் தான் ராவணன் உருவ பொம்மையில்லை என்று விபீசனன் வேசம் போட்டவன் கூட உறுதியா சொன்னதாகவும் சொன்னார்கள். முதலில் ராவணனை எரித்து பொசுக்கியதாகவும் பின் ஒரு நாள் கழித்து அம்பு வீசி கொன்றதாகவும் சொன்னார்கள். எது உண்மையோ அது அந்த ராமனுக்கும் ராவணனுக்கும் தான் வெளிச்சம்.

ஒவ்வொரு முறையும் ராவணன் வதம் முடிந்தபின் அடுத்த முறை மீண்டும் ராவணன் வதம் செய்ய இவர்களுக்கு எப்படி எங்கிருந்து ராவணன் மீண்டும் உயிருடன் வருகிறான் என்பதைப் பற்றி பொது மக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அப்படியே கேட்டாலும் "அது போன தடவை... நான் சொல்றது இந்த தடவை" அப்படின்னு 'வின்னர்' பட வடிவேல் போல சமாளிக்க இதை விழாவா கொண்டாடுற ராவணனின் எதிரிகளும் பொய் சொல்ல கூச்சப் படுறதே இல்லை.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குன்னு எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க. ஆனாலும் ஒவ்வொரு முறையும் புளுகறவன் புளுகிட்டு தான் இருக்கான். மக்களும் அப்போதைக்கு நம்பிகிட்டு தான் இருக்காங்க. இந்த ராவண வதமும் மறுபடி மறுபடி நடந்துக்கிட்டு தான் இருக்கு.

பி.கு:
1) இது "ராவணன் வதம்" என்று பல ஊர்களில் நிகழும் ஒரு நிகழ்வை குறித்த என் பார்வை.
2) நான் ராமனையோ ராவணனையோ கும்பிடுவதில்லை.
3) இந்த இடுகையில் வேறெந்த உள்குத்தும் இல்லை.