எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 4
Google Buzz Logo

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4


சென்ற இடுகையில் எழுத்துரு உருவாக்கப் பயன்படும் ஃபாண்ட் ஃபோர்ஜ் பற்றியும் அதை நிறுவுதல் குறித்தும் பார்த்தோம். ஃபாண்ட் ஃபோர்ஜ் மூலமாக நாம் விரும்பிய எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் வழி குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.

அதிக அளவில் படங்கள் இருப்பதால் இந்த இடுகை பதிவிறங்க‌ சற்று நேரம் பிடிக்கும். ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்க வேண்டியிருப்பதால் பொறுமையாய் அனைத்து படங்களும் முழுமையாய் பதிவிறங்கி தெரிந்த பின் படிக்கவும்.

1) பகுதி 3 ன் கடைசியில் உள்ளது போல் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளில் நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவை திறந்து கொள்ளுங்கள்.
2) நமக்கு ஏற்கனவே உள்ள ஒரு ஒருங்குறி எழுத்துரு தேவை. இதற்காக TAMUni-Tamil042.ttf என்ற சுட்டியிலிருந்து இந்த எழுத்துருவை பதிவிறக்கி வண்தட்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.

3) கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு நாம் மாற்ற வேண்டிய எழுத்துருவுடன் மேலே பதிவிறக்கம் செய்த ஒருங்குறி எழுத்துருவை "Element -> Merge Fonts" பட்டி மூலம் தெரிவு செய்து இரண்டையும் கலப்பு செய்யுங்கள்.
4) இப்போது இரு எழுத்துருக்களும் கலந்துவிட்டன. ஆனால் ஒருங்குறிக்கு உரிய இடங்களில் உரிய எழுத்துக்கள் நாம் இணைத்த எழுத்துருவின் எழுத்து வடிவில் இருக்கிறது. இதனை மாற்ற நம்முடைய எழுத்துருவின் எழுத்து வடிவினை பின் வருமாறு நகல் எடுத்து உரிய இடங்களில் ஒட்டிவிடுங்கள்.
நகல் எடுத்து ஒட்டும் போது கீழ்கண்டவாறு Warning வந்தால் "No" எனத் தெரிவு செய்யுங்கள்.
இல்லாத எழுத்து வடிவங்களை (உம். ஔ ) உருவாக்க, நம் எழுத்துருவின் இரு எழுத்துக்களையும் அடுத்தடுத்தாக நகல் எடுத்து வேண்டிய இடத்தின் எழுத்து வடிவை double click செய்து ஒட்டி ஏற்படுத்தலாம். (உம் ஒ + ள )
5) இதே போல எழுத்துருவின் கடைசி பகுதிக்கு Scroll செய்து சென்று அங்கு உள்ள எழுத்து வடிவங்களையும் நம்முடைய எழுத்துருவின் வடிவத்துக்கு மாற்றுங்கள்.
6) இப்போது வேண்டிய எழுத்து வடிவங்கள் கிடைத்துவிட்டன ஆனால் ஒருங்குறிக்கு உரிய GSUB விதிகள் எழுதப்பட வில்லை. இதற்காக தனியே ஒவ்வொரு விதியையும் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. TAMUni-Tamil.fea என்ற சுட்டியில் உள்ள GSUB விதிகள் அடங்கிய கோப்பை பதிவிறக்கம் செய்து வண் தகட்டில் சேமித்துக் கொள்ளுங்கள். பின்னர் "File -> Merge Feature Info" பட்டி மூலம் GSUB விதிகள் அடங்கிய கோப்பை தெரிவு செய்து இவ்விதிகளை நம் எழுத்துருவுக்குள் ஏற்றுங்கள்.
7) இவ்வாறு ஏற்றப்பட்ட விதிகளை "Element -> Font Info -> Lookups" பட்டி மூலம் பார்வையிடலாம்.
8) இப்போது எழுத்துருவின் பெயர், விளக்கம், உருவாக்கியவர் போன்ற விவரஙகளை "Element -> Font Info -> Names" பட்டி மூலம் மாற்றலாம்.
9) சரி. எல்லாம் முடிந்தது. இப்போது ஒருங்குறியாக்கபட்ட புதிய எழுத்துருவை உருவாக்க "File -> Generate Fonts" பட்டியை தெரிவு செய்யுங்கள்.
10) வேண்டிய எழுத்துரு கோப்பின் பெயர், எழுத்துரு வகை முதலிய வற்றை தெரிவு செய்து சேமியுங்கள்.
இவ்வாறு உருவாக்கப் பட்ட எழுத்துருவை மூலம் கணினியில் நிறுவி பார்வையிடுங்கள், பயன்படுத்தி சரி பாருங்கள்.
தவறுகள் ஏதும் இருந்தால் அவற்றை மேற்கண்ட படிகளில் கூறியவாறு மீண்டும் மாற்றி சேமியுங்கள்.

அவ்வளவே. முடிந்தது.

இது வரை இந்தத் தொடரில் வந்த இடுகைகளில் ஒரு எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றும் எளிய வழி குறித்து பார்த்தோம். இதன் விரிவான செயல்விளக்க ஒலி/ஒளி கோப்பினை பின்னொரு நாள் வலையேற்றுகிறேன்.

புதிதாய் ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்துருவை உருவாக்குவது எப்படி, GPOS, GSUB குறித்த மேலதிக விளக்கங்கள் போன்ற நுட்பங்களை பற்றி மேலதிகமாக அறிய விரும்புவோர் எனக்கு தனி மடல் இடவும்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

தகடூர் தமிழ் இணையப் பயிலரங்கும் தமிழ்ச் சங்க விழாவும்
Google Buzz Logo

கடந்த ஞாயிறன்று (14 செப்டெம்பர் 2008) தருமபுரியில் காலை 10:00 மணிக்கு விஜய் வித்யாலயா மேனிலைப் பள்ளிஅரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கும் அன்று மாலை 6:00 மணிக்கு பெரியார் அரங்கில் தமிழ்ச் சங்க விழாவும் நிகழ்ந்தது.

  • பயிலரங்குக்கு சில நாட்களுக்கு முன் தான் முனைவர். மு. இளங்கோவன் உடனான எனது மின்னஞ்சல் தொடர்பும் தொடங்கியது. தமிழ்மணம் காசி அவர்கள் என்னைப் பற்றி முனைவர். மு. இளங்கோவனிடம் கூறியிருக்கிறார். தருமபுரி பயிலரங்கம் குறித்த விவரங்களை முனைவர் எனக்கு மின்மடலில் அனுப்பியிருந்தார்.

  • முனைவர் மு.இளங்கோவனை முதல் முறையாய் சந்தித்தேன். சனியன்று இரவே தருமபுரி வந்தடைந்தார். புகைப்படத்தில் உள்ளது போலவே இருக்கிறார் என்பதால் எளிதாய் அடையாளம் கண்டுகொண்டேன்.

  • பேருந்து நிலையத்தில் சந்தித்த பின் மருத்துவர். கூத்தரசன் (பயிலரங்கு மற்றும் விழா ஏற்பாட்டாளர்) அவர்களின் இல்லத்திற்கு வந்தடைந்தோம்.

  • தமிழ் இணையத்தில் நுட்பப் பங்களித்து வரும் பலரின் பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

  • சத்தமில்லாமல் தமிழ் இலக்கியத்தில் மாபெரும் சாதனைகள் படைத்த பல பெரியோர்கள் குறித்து இடுகைகளை பதிவு செய்து வருவதாகவும், அவர்களை சந்தித்தது குறித்த சுவையான பல தகவல்களையும் முனைவர். மு. இளங்கோவன் உற்சாகமாய் விளக்கிக் கொண்டிருந்தார்.

  • மருத்துவர். கூத்தரசன் தருமபுரி நகரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர். எனது பங்களிப்புகளை பற்றி அறிந்து, எனது செயலிகளுக்கு தகடூரின் பெருமை மிக்கவர்களின் பெயர் வைப்பதை குறித்து குறிப்பிட்டு பாராட்டினார்.

  • ஞாயிறன்று பயிலரங்கில் சந்திப்பதாய் கூறி விடை பெற்றேன்.

  • மறுநாள் காலை முகுந்த் 9:25 மணியளவில் தருமபுரி வந்தடைந்தார். அவரை வரவேற்று சிறிது இளைப்பாறிய பின் நானும் அவரும் பயிலரங்கம் நடக்கும் அரங்கத்துக்கு வந்தடைந்தோம்.

  • விரிவான அறிமுகத்துக்கு பின் பயிலரங்கம் துவங்கியது. முனைவர். மு. இளங்கோவன் மின்னஞ்சல் துவங்குவதில் தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம். பின்னூட்டம். கூகிள் உரையாடல் என பலவற்றை விளக்கினார். இடையிடையே நானும் முகுந்தும் அவருக்கு உதவி செய்தோம்.

  • பயிலரங்கு ஒரு மணியளவில் முற்று பெற்றது. இந்தப் பயிலரங்கின் பயனை அறிய வருகையாளர் சிலரை முனைவர் மு. இளங்கோவன் மேடைக்கு அழைத்தார்.

  • பெரும்பாலான பார்வையாளர்கள் கணினியில் தமிழை பயன்படுத்துவது இவ்வளவு எளிதானது என பயிலரங்குக்கு பின்னரே அறிந்ததாகவும் உடனடியாய் வலைப்பதிவு துவங்கி தத்தமது படைப்புகளை வலையேற்றப் போவதாகவும் கூறிய போது, அவர்களுள் ஒரு ஐம்பது பேராவது வலைப்பதிய வருவார்கள் என்று தோன்றியது.

  • பயிலரங்குக்கு பின் மருத்துவர். கூத்தரசன் அவர்கள் இல்லம் வந்தடைந்தோம். மாலை தமிழ்ச் சங்க விழாவுக்கு வருவதாகக் கூறி விடை பெற்றேன்.

  • மாலை தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டேன். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியர்கள், தகடூரைச் சேர்ந்த பல தமிழ் இலக்கியப் பங்களிப்பாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது.

  • செயலர் உரைக்குப் பின் எனக்கு "இணையத் தமிழ் மென்பொருளறிஞர்" விருது அளித்தனர். எனது தமிழாசிரியர்களுக்கு முன் நான் பிறந்த மண்ணில் தமிழ்ச் சங்க விழாவில் இத்தகைய ஒரு விருது பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை.

  • ஐதராபாத் சேல்ல வேண்டிய தொடர்வண்டிக்கு நேரமானதால் விழாவின் நடுவிலேயே விடைபெற்று தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்.

  • தமிழ்ச் சங்க விழாவில் முனைவர். மு. இளங்கோவன் மற்றும் தமிழா! முகுந்த் ஆகியோரின் விருது மற்றும் உரைகளை கேட்க இயலாமல் போனது குறித்து சிறு வருத்தம். எனினும், ஒலி/ஒளிப் பதிவு செய்யப் பட்டிருப்பதால் பின்னர் அதில் பார்த்துக் கொள்ள இயலும் என்பதால் சற்று ஆறுதலாய் உள்ளது.
விரிவான செய்திகள் மற்றும் படங்களை முனைவர் திரு. மு. இளங்கோவன் அவர்களின் கீழ்கண்ட இடுகைகளில் காணலாம்: