வலைப்பூ உலகில் ஒரு கீதோபதேசம்
Google Buzz Logo

முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!

கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.

கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.

குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது

கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!

கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!

குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.

கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.

குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.

கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.

குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.

கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!

குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?

கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!

குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.

(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)

பின் குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. என்னை அறியாமல் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

18 கருத்து(க்கள்):

வீ. எம் |

இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்..
//கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.//
சீக்கிரமே நாமெல்லாம் சேர்ந்து ஒரு கையேடு (guide) போடலாமே...என்ன சொல்றீங்க கோபி??..
வீ எம்


பினாத்தல் சுரேஷ் |

//பின் குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. என்னை அறியாமல் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க. //

கிஷ்டனின் உபதேசத்தை நீங்களே ஃபாலோ பன்னலேன்ன எப்படி?

போஸ்ட் போடு-- பின்னூஉட்டத்தை எதிர்பாராதே!


பெயரில்லா |

கோபி சொன்னது...

வீ.எம்.

கையேடு தான் இங்கிலீஷ்ல ஆச்சோ...

சுரேஷ்,

//போஸ்ட் போடு-- பின்னூஉட்டத்தை எதிர்பாராதே! //

ஆனா அந்த 15 நிமிஷப் புகழுக்குத் தான் நாமெல்லாம் வலைப் பதியறோம்ன்னு பெரியவங்கல்லாம் சொல்றாங்க.


பெயரில்லா |

அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

குறும்பு கண்ணா குறும்பு. இறுக்கத்தை தவிர்க்க இந்த மாதிரி லைட் லைட்டர் லைட்டஸ்ட் பதிவுகள் அவசியம் தேவை. அருமை.


பெயரில்லா |

mugamoodi சொன்னது...

டாய்ய்ய்ய்.. எவண்டா அவன் என் சாதி தலைவனை.. ஒ உபதேசத்துல உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. கலக்கல் கோபி கலக்கல்


பெயரில்லா |

கோ.கணேஷ் சொன்னது...

எவண்டா அவன் எங்க சாதி கடவுளை கிண்டல் பண்ணினது


பெயரில்லா |

மூர்த்தி சொன்னது...

கோபி,

கலக்கல் சிரிப்பு பதிவு!


பெயரில்லா |

கோபி சொன்னது...

அல்வாசிட்டி.விஜய், மூர்த்தி,

நன்றி!

mugamoodi,கோ.கணேஷ்,

ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! ஆரம்பிச்சிட்டாங்கைய்யா!!

:-P


பெயரில்லா |

mayavarathaan சொன்னது...

சூப்பரு!!


பெயரில்லா |

துளசி கோபால் சொன்னது...

"ஆஹாங்.... கோபின்னு பேரோட பிருந்தாவனத்திலே உக்காந்திருக்கும் துஷ்டனாகிய
கிஷ்டா, ஏண்டாப்பா இப்படி குர்ஜுனனுக்கு கெட்டோபதேசம் செஞ்சு வைக்கின்றாய்?
'மாயை' உன் கண்களையும் மறைச்சுடுத்தா?"

கோபி, நல்லாச் சிரிச்சேன்:-)))))


பெயரில்லா |

ஞானபீடம் சொன்னது...

இதே பாணியில்,
யேகோவா தேவன் மோஸசுக்கு அருளிய 10 கட்டளைகள் மற்றும்
அல்லா, முகமது நபிக்கு அருளியது போன்றவற்றையும் எழுத முடியுமா?


பெயரில்லா |

கோபி சொன்னது...

நன்றி மாயவரத்தான்

துளசியக்கா.. எல்லாம் மாயை.. :-)

ஞானபீடம், சாதிச் சண்டையே வேணாங்கறேன்.. மதச் சண்டை வேற எதுக்கு?


பெயரில்லா |

மாயவரத்தான்... சொன்னது...

இதெல்லாம் டூ மச் கோரிக்கைகள் ஞானபீடம்


பெயரில்லா |

ஞானபீடம் சொன்னது...

எப்படி two much மாயவரத்தாரே ! (கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டையும் எழுதச்சொன்னதாலா?)

இல்லை, இந்து மதம் மட்டுமே உண்மையிலேயே பெருந்தன்மை உடையது. எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம்; யாரும் ஒன்றும் கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும், நானும் இந்து தான் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவா?.

அல்லது மற்ற மதங்களிடம் வாலாட்டினால் வாலையும் சேர்த்தே வெட்டிவிடுவார்கள் என்ற பயமா?
அய்யோ நானு சும்மா நகைச்சுவைக்குத்தான் சொன்னேன்; மற்றபடி உள்ளுக்குள்ள ஒன்னும் இல்லே-னு சொல்லிப்பாருங்களேன். என்ன நடக்கும்-னு?.
ஞானபீடம்


பெயரில்லா |

கோபி சொன்னது...

அடாடா! கிஷ்டனும் குர்ஜுணனும் இந்துக்களா? இவ்ளவு நாளா இது எனக்கு தெரியாமப் போச்சே!


பெயரில்லா |

gayathri சொன்னது...

எப்படியோ! எரியற நெருபுல உங்க பங்குக்கு 2 ஸ்பூன் கிஷ்டனாயில ஊத்திட்டிங்க..


பெயரில்லா |

இராதாகிருஷ்ணன் சொன்னது...

:-))


பெயரில்லா |

கோபி சொன்னது...

//எப்படியோ! எரியற நெருபுல உங்க பங்குக்கு 2 ஸ்பூன் கிஷ்டனாயில ஊத்திட்டிங்க..//

சேச்சே! இல்லிங்க. நல்லாப் பாருங்க.. ஊத்தினது தண்ணி..